Monday, 8 March 2010

காதலை(ப்)பற்றி...

நான் உண்மையிலேயே குழம்பிப்போய்தான் உள்ளேன். காதல் என்றால் என்ன? எப்படி அடையாளம் கண்டு கொள்வது? எப்படி தோன்றுகின்றது? ஏன் தோன்றுகின்றது? யாரிடம் தோன்றுகின்றது? இப்படி நீண்டு கொண்டு செல்லும் கேள்வி பட்டியல் என்னுள் எழுந்து கொண்டிருகிறது...

காதலை பற்றி நான் ஏன் ஆய்வு செய்யணும்? காதல் ஆய்வு செய்ய வேண்டிய விடயமா? அதை அனுபவித்து அதனுடன் கலந்து வாழ்ந்து விட வேண்டிய அனுபவமா? இல்லாவிட்டால் துர நின்று பார்த்து விட்டு செல்லும் காட்சியா?

காதலைப்பற்றி என் அறிவுக்கு எட்டிய தூரம் அல்லது என் பார்வையில் காதல்.... இந்தப்பார்வை அல்லது காதல் பற்றிய எண்ணம் இன்று எனக்கு சரியாக இருக்கலாம். நாளை பிழையாகவோ அல்லது வேறு வடிவமாகவோ மாறிவிடலாம். நேற்றுவரை காதல் என்பது தெரியாத மொழியாகவும் அதைப்பற்றி அதிகளவு தெரியாமலும் இருந்தது.

அதற்காக இன்று நான் காதலில் வீழ்ந்தவன் என்று அர்த்தமில்லை. இப்பொழுது எனக்கு கிடைத்திருக்கும் தனிமையும் நேரமும் எனது வயதும்கூட காதலைப்பற்றி எண்ண என்னை தூண்டியிருக்கலாம்.

யாரிடம்...
நம் வாழ்கையில் தினமும் எவ்வளவோ இடங்களுக்கு செல்கின்றோம். எத்தனையோ மனிதர்களை சந்திக்கின்றோம். அதில் பல மனிதர்களை கண்டும் காணாமல் செல்கின்றோம். சிலரிடம் ஒரு புன்னகையை மட்டும் விட்டு செல்கிறோம். சிலரிடம் சில நாள் பழக்கம். ஒரு சிலரிடம் தொடர்ந்து பழகும் சந்தர்ப்பங்கள்.... இதில் யாரிடம் காதல் தோன்றுகின்றது..

ஒரு கொள்கலனில் அடைக்கப்பட்ட வாயு மூலக்கூறுகளின் இயக்கம் பற்றியும் அவை ஒவ்வொன்றுடன் மோதிக்கொள்ளும் போது இரசாயன தாக்கம் ஏற்படுகின்றது என்ற விஞ்ஞான கொள்கை நிலவுகின்றது. அந்த மூலக்கூறுகள் அவை ஏற்படுத்தும் எல்லா மோதல்களிலும் தாக்கம் ஏற்படும் என்றில்லை. இரு மூலக்கூறுகள் சரியான நேரத்தில் சரியான வேகத்துடன் சரியான பகுதியில் மோதிக்கொள்ளும் போதே தாக்கம் ஏற்பட்டு மற்றைய மூலக்கூற்றுடன் பிணைப்பை ஏற்படுத்தும். பிணைப்பை ஏற்படுத்திய மூலக்கூறு வேறு பல மூலக்கூறுகளுடன் மோதி இருக்கலாம். பிணைப்பை ஏற்படுத்திய மூலக்கூறுடன் ஏற்கனவே மோதலை நிகழ்த்தி இருக்கலாம். ஆனால் பிணைப்பை ஏற்படுத்தும் சரியான மோதல் ஏற்படுகையிலேயே தாக்கம் நிகழும்.

மூலக்கூறுகளை காதலராகவும் மோதல்களை சந்திப்புகளாகவும் தாக்கத்தை காதலாகவும் பிணைப்பை பின்னர் ஏற்படும் உறவாகவும் பிரதியிடுப்பார்த்தால்...
இதனையே காதல் யாரிடம் தோன்றுகின்றது என்ற வினாவுக்கு விடையாக கொள்ளலாமா?

நம் காதலராக அமையப்போகின்றவரை காதலுக்கு முன்னர் சில/ பல தடவைகள் சந்தித்து இருக்கலாம். ஆனால் சரியான இடத்தில் சரியான நேரத்தில் இருவரது எண்ணமும் ஒருமிக்க சந்தித்து கொள்ளும் போது காதல் என்னும் தாக்கம் ஏற்படுகிறதோ என்று எண்ண தூண்டுகின்றது.

No comments:

Post a Comment