Wednesday, 26 May 2010

ஓவியத்துக்குள் ஓவியம்

நீ தொடு தூரமென்றாலும் உன்னைத்தொட, தொடாமல்
ஏங்கி தவிக்கும் என் விரல்கள்
நீ தொலைவான போது உன்னைத்தொடாமல், தொட
வெட்கி நிற்கும் என் அதே விரல்கள்...

நீ சிரிக்கும் போது உன் எதிரில் சுவர் ஏதும் இல்லாமல் பார்த்துக்கொள் ஏனென்றால்
நீ சிந்தும் சிரிப்புகள் எதிரொலியாய் சிதறும் போது கதறுகிறது என் மனது
எதை சேகரிப்பது என்று தெரியாமல்.. உன் சிரிப்பையா இல்லை சிவரின் சிரிப்பையா...

இன்னொரு தடவை பூந்தோட்டத்தில் என்னை சந்திக்க வராதே.
நீ சென்ற பின்பும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.
நீ அருகிருந்த பூச்செடியிடம் நீயென நினைத்து...

உன்னிடம் நான் ஏதோ ஒன்று குறும்பாய் சொல்ல நீயோ "போடா பொறுக்கி" என்கிறாய்.
நான் ரகசியமாய் நீ சிந்தும் புன்னகை பூக்களை பொறுக்கும் பொறுக்கி என்ற உண்மை உனக்கு எப்படி தெரிந்தது?

ஓவிய கண்காட்சிக்கு சென்ற போது நீ அங்கிருக்கும் ஓவியங்களை பிரமித்து பார்த்துக்கொண்டிருந்தாய். நானோ உன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென என் பக்கம் திரும்பிய நீ சிரித்துக்கொண்டே என்ன என்பது போல் பார்த்தாய். ("ஓவியங்களை விட நீயே அழகாய் இருகிறாய்" என்ற பதிலை நீ எதிர்பார்த்திருப்பாய் போல) "ஓவியத்துக்குள் ஓவியம் இன்றுதான் நான் காண்கிறேன்" என்பதை அறியாத நீ.

புத்தகத்துக்குள் மயிலிறகு வளர்க்கும் சிறுவனிடம் மயிலிறகு ஒன்றை தருமாறு கெஞ்சிக்கொண்டிருந்தேன்.
விசித்திரமாய் பார்த்த நீ எதுக்கு இந்த வயதில் உனக்கு மயிலிறகு என்றாய்?
மயிலிறகால் மை தொட்டு மையலே உன் பெயரெழுததான்..
எங்கே, பேனாவினால் உன் பெயரெழுதினால் உனக்கு வலிக்குமோ என்றுதான் என்றேன்.


Friday, 14 May 2010

அடியா.. கடியா..

வாழ்கையில...
விழுகிற ஒவ்வொரு அடியும்
ஏறிப்போற படி மாதிரி.
எவ்வளவு அடி விழுகுதோ
அவ்வளவு மேல நாங்க போவோம்...
ஆனா இடி விழுந்தா
ஒரேடியா மேல போயிடலாம்!!!

குழம்பின குட்டையில மீன் பிடிக்கமுடியாது என்று சொன்னங்க....
நானும் குட்டை தெளியிர வரைக்கும் காத்திருந்து வலையை விசினேன்.
ஆனால் மீன் பிடிபடவில்லை. கடைசியா ஒரு முடிவுக்கு வந்தேன்.
"மீன் இல்லாத குட்டையிலையும் மீன் பிடிக்கமுடியாது!!!"

முதல் தடவை விமானத்தில் பறக்கும் போது
உயரத்தில் நான் இருப்பதை எண்ணி பெருமை கொண்டேன்.
ஆனால் விமானம் என்னதான் ஆயிரம் அடி உயரத்துல பறந்தாலும்
விமானநிலையம் வந்தா கீழே இறங்கித்தான் ஆகணும்!!!

நேற்று கிடைச்சது இன்னைக்கு கிடைக்காது
இன்னைக்கு கிடைக்கிறது நாளைக்கு கிடைக்கபோறதில்லை
நாளைக்கு கிடைக்கபோறது என்றைக்கும் கிடைத்துக்கொண்டிருக்காது.
அதனால கிடைக்கிறத கிடைச்ச அன்னைக்கே அனுபவிச்சா கிடைச்ச அந்த சந்தோசம் மட்டும் என்னைக்கும் கிடைக்கும்!!!

வாழ்ந்த அனுபவத்தின் மூலம் சொல்பவனின் தத்துவத்தில் பல அடிகள் இருக்கும்
ஆனா சும்மா பொழுது போகாம சொல்லுர தத்துவத்தில் பல கடிகள் தான் இருக்கும்!!!

Monday, 10 May 2010

பூவுக்கே பூச்செண்டா?

காலையில் நீ தினமும் கண்விழிக்கும் போது
கண்ணாடி அணிந்து கொள்.. என்றேன்
ஏன் என்கிறாய்?
வண்டுகளும் தேனீக்களும்
உன் கண்களுக்குள் புகுந்து விடாதா என்ன...

சாலையில் உதிர்ந்து கிடக்கும்
பூக்களை மிதிக்காமல்
நீ எட்டி எட்டி நடந்து வருகிறாய்...
ஆனால் நீயேன் அறியவில்லை
ஒரு பூ மிதித்து இன்னொரு பூவுக்கு எப்படி வலிக்கும் என்று...

உலக சமாதானத்தைப்பற்றி பேசிய ஒருவர் சொன்னார்
உலகத்தை வெள்ளைப்பூக்களால் நிரப்புங்கள் என்று...
மறுநாளே நான் நிரப்பிவிட்டேன்
உனக்கொரு வெள்ளை நிற சுடிதார் வாங்கித்தந்து...

காதலர் தினத்தில் காதலிக்கு பூக்கொடுப்பவர்களை
கண்டு கோவப்பட்டேன் பொறாமையால் அல்ல
பூவுக்கே பூச்செண்டா?