Monday, 15 February 2010

என் மொழி சொல்லும் காதல்

பூ மீது கொண்ட காதலை
காற்று சொல்லிவிடுகிறது தென்றலாய்...
புல் மீது கொண்ட காதலை
இரவு சொல்லிவிடுகிறது பனித்துளியாய்...

புவி மீது கொண்ட காதலை
நிலவு சொல்லிவிடுகிறது பௌர்ணமியாய்...
மண் மீது கொண்ட காதலை
விண் சொல்லிவிடுகிறது மழையாய்...

கரை மீது கொண்ட காதலை
கடல் சொல்லிவிடுகிறது அலையாய்...
கல் மீது கொண்ட காதலை
சிற்பி சொல்லிவிடுகிறான் சிலையாய்...

மொழி மீது கொண்ட காதலை
கவிஞன் சொல்லிவிடுகிறான் கவிதையாய்...
உன் மீது கொண்ட காதலை
நான் சொல்லிவிடுகிறேன் மௌனமாய்...

நீ மௌனம் எனும் மொழி புரிவாயா?
இல்லை என்றால் இதோ
சொல்கிறேன் என் மொழியாய்....

Wednesday, 10 February 2010

கடற்கரை தருணங்கள்


கடற்கரை கோலங்களாக காதலர்களின் கால் தடங்கள் ஆங்காங்கே பரவிக்கிடக்கும் மாலை நேரம். சேர்ந்து பயணிக்கும் காதல் ஜோடிகளின் கால் தடங்களை கண்டு பொறாமைப்படும் கடலலைகள் அவற்றை எல்லாம் அழித்துவிட கங்கணம் கட்டிக்கொண்டு மணல் தரையில் போராடிக்கொண்டிருந்தது.....

பலபேர் அந்த கடற்கரையில் கூடியிருந்தாலும் ஆயிரம் பேர் என்னை கடந்து சென்றாலும் நான் உன் நினைவுகளோடு தனிமையாகவே உனக்காக காத்திருந்தேன்...

மாலை வானம் தொலை கடல் மீது சாய்ந்து கொண்டு சிவப்பாய் சிவந்துகொண்டிருந்தது...
நேற்று நீ என்தோள் சாய்கையில் உன் வெட்கி சிவந்த முகமே என் முன் காட்சியாய் தோன்றிட எனக்குள்ளே சிலிர்த்துக்கொண்டேன்.

திடீரென இரு கைகள் பின்னால் இருந்து என் கண்களை மூடிக்கொள்ள.....

"உன்னைத்தவிர வேறு யாரும் என் கண்களை மூடப்போவதில்லை எதற்கு இந்த வேண்டா வேலை கவிதா"

என்றபடி கண்களை மூடிய கைகளை விலக்க முயற்சிக்காமலே அமர்ந்திருந்தேன். கைகளை நீயாகவே எடுத்துவிட்டு என் தலையில் ஒரு குட்டு...
மென் கோபம் உன் கண்களில் தெரிந்திட ஓர் அதட்டும் பாணியில் நீ கேட்டாய்....

"யாரவள் எனக்கு தெரியாமல்?"

சிறு ஏளனப்புன்னகையுடன் நான்...

"உன்னைத்தவிர வேறு யாரும் என் கண்களை மூடப்போவதில்லை எதற்கு இந்த வேண்டா கேள்வி"

என்றேன். புரிந்தவளாய், சிணுங்கினாய் நீ... ரசித்தேன்.

"மன்னித்துக்கொள் இன்று 'கொஞ்சம்' நேரமாகிவிட்டது. நீ வந்து கனநேரமோ..?"

"இல்லை இப்பதான் 'கொஞ்ச' நேரம்..... மூன்று மணிக்கு வந்தனான்"

"அடப்பாவி இது உனக்கு கொஞ்ச நேரமோ? ஐந்து மணிக்கு தானே வருவதாய் சொன்னாய்....."

"நீ அருகில் இருக்கும் போது உன்னை நினைப்பதை விட உனக்காக காத்திருக்கும் போதே உன்னை அதிகமா நினைக்கிறேன்..
உனக்காக நீண்ட நேரம் காத்திருக்கலாம் என்றுதான்...."


நீ என்தோள் சாய்கிறாய்...... வானம் சிவந்திருந்தது....

காதல் நோய்கள்



புற்று நோய்
இதயத்தை புற்று நோய்
தாக்குவதில்லை
ஏன் என்றால்
நீ அங்குதான்
தங்கியிருக்கிறாய்...

மாரடைப்பு
என் இதயத்தில்
இருந்த நீ
கடித்து துப்பிய
நகங்கள்
அடைத்துக்கொண்டது
நாளங்களை...

தும்மல்
நீ அருகில்
செல்லும் போது
என் நுரையீரல்
காற்றெல்லாம்
உன் நுரையீரல்
புகுந்து கொள்ள
பேராசைப்படுகிறது...

ஆஸ்துமா
உன் மூச்சுக்காற்று
கலவாத காற்றை
சுவாசிக்கும் போது
என்னை
தொந்தரவு செய்கிறது...

வாந்தி
உன்னை நினைக்காமல்
உண்ட உணவெல்லாம்
சமிபாடு அடையுதில்லை...

மூச்சடைப்பு
என் மூச்சுக்குழாய்
அளவு போதவில்லை
உன்னக்கும் சேர்த்து
நான் சுவாசிப்பதற்கு...

Monday, 8 February 2010

இ. மா. ச. சி. நிபுணன்

இதுவரை நாள் எனக்கு
தெரிந்தது எல்லாம்
இதய மாற்று சத்திர சிகிச்சைதான்
ஆனால் நீயோ எனக்கு
உன்னிதயத்தை தந்து
என்னிதயத்தை நீ எடுத்துக்கொண்டு
இதய பரிமாற்று சத்திர சிகிச்சை
செய்துவிட்டாயே...

மனதில் பதிந்த பாடல் ஒன்று...



பெம்மானே பேருலகின் பெருமானே
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ


வெய்யோனே என்புருகி வீழ்கின்றோம்
வெந்தழிந்து மாய்கின்றோம் விதிதானோ
புலம்பெயர்ந்தோம் பொலிவிழந்தோம் புலன்கழிந்தோம்
அழுதழுது உயிர்கிழிந்தோம் அருட்கோனே

சோறில்லை சொட்டுமழை நீரில்லை
கொங்கையிலும் பாலில்லை கொன்றையோனே
மூப்பானோம் முன்வளைந்து முடமானோம்
மூச்சுவிடும் பிணமானோம் முக்கணோனே
ஊன் தேய்ந்தோம் ஊனுருகி உயிர் ஓய்ந்தோம்
ஓரிழையில் வாழிகின்றோம் உடையகோனே


நீராகி ஐம்புலனும் வேறாகி
பொன்னுடலம் சேறாகி போகமாட்டோம்
எம்தஞ்சை யாம்பிறந்த பொன்தஞ்சை
விரலைந்தும் தீண்டாமல் வேகமாட்டோம்
தாழ்ந்தாலும் சந்ததிகள் வீழ்ந்தாலும்
தாய்மண்ணில் சாகாமல் சாகமாட்டோம்

பொன்னார் மேனியனே வெம் புலித்தோல் உடுத்தவனே
இன்னோர் தோல்கருதி நீ எம்தோல் உரிப்பதுவோ
முன்னோர் பாற்கடலில் அன்று முழுநஞ்சுண்டவனே
பின்னோர் எம்மவர்க்கும் நஞ்சு பிரித்து வழங்குதியோ

பெம்மானே! பேருலகின் பெருமானே!!
ஆண்டஇனம் மாண்டழிய அருள்வாயோ?

பிரதி எடுக்கப்பட்ட தளம் (http://pachaitamilan.blogspot.com/2009/06/blog-post_24.html)

ஆயிரத்தில் ஒருவன் தமிழ் திரைப்படத்தில் இருந்து...

Sunday, 7 February 2010

காதல் குருடன்

என் கண்ணிமைகளுக்குள் ஒளிந்து கொண்டாயோ...
நான் கண்ணிமைக்கும் கணங்கள் கூட
கண்களுக்குள் கனவாய் வருகிறாயே...

என் கண்ணிமைகள் களவாடி சென்றாயோ...
கண்ணிமைகளை திறந்தாலும் மூடினாலும்
ஒரே காட்சியாய் நீயே தெரிகிறாயே...

என் கண்களுக்கு ஓய்வின்றி போனதுவோ...
கண் விழித்தாலும் அயர்ந்தாலும்
உன் பிம்பத்தையே மூளைக்கு அனுப்புகிறதே...

என் கண்களுக்குள் நீ விழுந்துவிட்டாயோ...
கண்கள் வேறு காட்சி காணாமல்
மறைத்து நிற்கிறாயே...

என் கண்கள் என்ன தவம் செய்ததுவோ...
உன் உருவம் கண்டு
பிறந்த பயன் அடைந்து விட்டதுவே...

என் கண்கள் இனி குருடாய் போனாலும்
அவை அனுப்பிய உன் பிம்பம்
என் உடலின் ஒவ்வொரு செல்களிலும்
அழியாச்சுவடுகளாய்....

Thursday, 4 February 2010

குட்டுப்பட்ட கூட்டம்!!

குட்ட குட்ட குனிந்தது ஒரு கூட்டம்
குட்டப்பட்ட கூட்டம் எழுந்தது ஒரு கட்டம்!

திடுக்கிட்டது குட்டிய கூட்டம்
தீட்டியது பல சதித்திட்டம்!

உடைத்தெறிந்தான் திட்டமெல்லாம்
குட்டுப்பட்ட கூட்டத்தில் ஒருவன்!

தளரவில்லை குட்டுப்பட்ட கூட்டம்
மீண்டும் மீண்டும் எழுந்தது!

விட்டுவிட்டது குட்டுவதை குட்டிய கூட்டம்
விடவில்லை தொடர்ந்து குட்டும் எண்ணத்தை!

மீண்டும் குட்டினால்
குட்டுப்பட்ட கூட்டம் வீழ்ந்துவிடுமா?
இல்லை எழுந்து வருமா?

சி(க)ல்லறைக்கனவு

சில்லறைகள் கல்லறை வரை வருவதில்லை...
ஆனால்
சில்லறைகளால் சில்லறைத்தனமானவர்கள்
கல்லறை வருவார்கள்!!!

சில சில்லறை சேர்ப்பவர்கள்
கல்லறை சேரப்போவதை மறந்தவர்கள்...
அவர்கள்
சில்லறைகளால் எதையும் செய்ய நினைப்பவர்கள்
ஆனால்
கல்லறைகளை அவர்கள் தவிர்த்துவிட முடியாது!!!

சில்லறைகள் என்றும் நிலைப்பதில்லை
கல்லறைகளே நிரந்தரமானவை...
சில்லறைகள், கல்லறை போகும் பாதையில்
சிதறி கிடக்கும்
சிற்றின்பமே...
அது கல்லறை வரை வரும் என்று
சில்லறைத்தனமாக கனவு காணாதே!!!