Sunday, 7 November 2010

உன்னாலே...

காதலும் கவிதையும் உன்னாலே
கனவும் கற்பனையும் அதனாலே
காற்றாய் நீ நுழைந்தாய் என் நெஞ்சிலே
காதலாய் மாறினாய் அஞ்சு நொடியிலே
விதையாய் முளைத்தேன் முதல் பார்வையிலே
மரமாய் வளர்ந்தேன் மறு நாளே

காதலும் கவிதையும் உன்னாலே
கனவும் கற்பனையும் அதனாலே
நிலவாய் நீயும் புகுந்தாய் என் இரவிலே
வெட்கம் கொண்டு ஒளிராமல்
ஒழிந்தாய் யார் நிழலிலே
நீலக்கரு மேகமாய் சூழ்ந்தாய் என் வானிலே
மாரி போல் பொழிந்தாய் கோடையிலே.

Monday, 6 September 2010

மரமாய் நான்...

நீ தினம் கடக்கும் பாதையோர
மரத்தைப்பார்த்து.....
அது உதிர்க்கும் பூக்களை
நீ மிதிக்காமல் எட்டி எட்டி நடந்து செல்லும்போதும்,
மழை ஓய்ந்த பின் குடையின்றி செல்லும் உன்மீது
இலைநீரை அது தெளிக்கும்போதும்,
அதன் கிளைகளை ஸ்பரித்து வரும்
காற்றை நீ சுவாசிக்கும் போதும்,
பொறாமைப்படுகிறேன்
அந்த மரமாய் நான் பிறந்திருக்கலாமே என்று.....

Wednesday, 21 July 2010

காதல் என்றால்...

ஓர் வரட்சியான காலகட்டம் நிலவுகின்றது அந்தக்காட்டில். எங்கும் வரட்சியால் உணவுக்கும் நீருக்கும் பெரும் தட்டுப்பாடு. பல மிருகங்கள் இறந்துகொண்டு வருகின்றது பட்டினியால். இரு மான்கள் சோடியாக காடுமுழுவதும் அலைந்து திரிகின்றன நீருக்காய். சிலநாட்கள் நீரின்றி அலைந்த களைப்புடன் கண்டுவிட்டன ஒரு வற்றிப்போன குட்டையை. அக்குட்டை முழுமையாக வற்றிப்போய் கொஞ்ச நீரே மிஞ்சியிருந்தது. எஞ்சியிருந்த கொஞ்ச வலிமையால் ஓடிச்சென்றன இருமான்களும் குட்டையருகே. நீரில் வாயை வைத்த பின்னர் தான் தெரிந்தது அந்த நீர் ஒரு மானுக்கு மட்டுமே போதும் என்று. பெண் மான் நினைத்தது தான் குடித்தால் எங்கே ஆண் மானுக்கு போதாமல் போய்விடுமோ என்றெண்ணி குடிப்பது போல் பாவனை செய்ய ஆண் மானும் தான் குடிக்காமல் தலையை எடுத்தால் பெண் மான் நீரை குடிக்காது என்றெண்ணி தானும் குடிப்பது போல் பாவனை செய்ய தொடங்கியது.
முடிவாய் ஆண் மான் குடிக்கட்டும் என்று பெண் மானும் பெண் மான் குடிக்கட்டும் என்று ஆண் மானும் நீரை குடிக்காமல் நடித்துக்கொண்டிருந்தன....

***********************************************************

எனது பட்டமளிப்பு விழாவின் திகதி அறிவிக்கப்பட்டது. இப்போது இருக்கும் பொருளாதார பிரட்சினைகளாலும் குடும்ப பொறுப்புகளாலும் அம்மாவையும் அப்பாவையும் விழாவிற்கு அழைப்பது கொஞ்சம் கஷ்டமான விடயமாக இருந்தது. என்றாலும் யாரவது ஒருவரை அழைக்கலாம் என்று எண்ணி அம்மாவை தொலை பேசியில் தொடர்பு கொண்டேன். விழாவிற்கு அம்மா வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். சிறிது நேர உரையாடலின் பின் தான் வரவில்லை அப்பாவை அழைக்குமாறும் சொன்னார்கள். ஏன் என்று கேட்டதற்கு தன்னை விட அப்பா வந்தால் தான் நன்றாக இருக்கும். அவர் தான் நான் நன்றாக படிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தவர் அதோடு அதற்காக மிகவும் பாடுபட்டவர் அவர் தான். அப்பா வந்தால் தன்னை விட அதிக சந்தோசப்படுவார் என்றார்கள் அம்மா. அப்போது அப்பா அருகில் இல்லை அவர் வெளியில் சென்றிருந்தராம். மறுநாள் அப்பாவிடம் தொலைபேசியில் பேசும் பொது அவரை விழாவிற்கு வருமாறு அழைத்தேன். உடனே அவர் அதை மறுத்து தான் வரவில்லை என்றார். நான் நேற்று அம்மா கூறியதை அப்பாவிடம் சொன்னேன். அப்பா உடனே சொன்னார் "உலகத்துல எவ்வளவு பெரிய சந்தோஷமான நிகழ்வா இருந்தாலும் சரி கவலையான நிகழ்வா இருந்தாலும் சரி உன் அம்மா பக்கத்துல இல்லாம அதை என்னால அனுபவிக்க முடியாது". அவர் முடியாது என்று முடிக்கும் முன்னர் என் கண்களில் முட்டி மோதியது நீர்...

Sunday, 18 July 2010

நீ நிலா



உனக்காக காத்திருந்தேன்
ஓரிரவில்
நீ தொலைவாய் நின்றிருந்தாய்
வரவேயில்லை
என்னருகில்
விடிந்த பின் தான்
தெரிந்தது
அது நீயில்லை நிலவென்று...

Wednesday, 7 July 2010

லூசுப்பையன் லூசுப்பொண்ணு

நீண்ட நாட்களாக கண்டது முதல் காதல் கொண்டு அவளின் பின்னால் அலைந்து திரிகிறான் ஒரு லூசுப்பையன். அவளிடம் பலமுறை தன் காதலை சொல்லிவிடுகிறான். ஆனால் அவனை தொடர்ந்து நிராகரித்து வருகிறாள் இந்த லூசுப்பொண்ணு. ஒரு நாள் வழமை போல தன் காதலை சொல்ல அவளை சந்திக்கிறான்...

லூ. பை :- ஹே.. கொஞ்சம் நில்லு. நான் உங்கிட்ட பேசணும்.

லூ. பொ :- ஹையோ... என்ன பேசணும்??? அதே வழமையான பல்லவி தானே...

லூ. பை :- அது இல்ல.. நான் இனிமேல் உன்னை லவ் பண்ணல!

லூ. பொ :- உண்மையாவா சொல்லுறாய்?

லூ. பை :- சத்தியமா சொல்லுறன் நான் இனிமேல உன்னை லவ் பண்ணமாட்டேன்.

லூ. பொ :- அப்பாடா... தொல்லை விட்டது... குட் பாய்.. (நல்ல பையன் இல்லைங்க.. good bye!!)

லூ. பை :- ஆனா நான் உன்னை காதலிக்கிறேன்...

லூ. பொ :- ஐயோ.. கடவுளே நீ உண்மையாவே லூசுதாண்டா

லூ. பை :- எனக்கு உன்மேல லவ் என்றால் நீ என்னை மறுத்த முதல் நாளே நான் உனக்கு நீ சொன்ன அதே good bye ஐ சொல்லிவிட்டு போயிருப்பேன்.
ஆனா இன்னும் உன் பின்னாடி வரேன் என்றால் அது காதலால் தான்...

லூ. பொ :- உங்களை எல்லாம் திருத்த(வே) முடியாது...

லூசுப்பொண்ணு முறைத்துக்கொண்டு செல்வதை வழக்கம் போல பரிதாபமாய் பார்த்துகொண்டிருந்தான் லூசுப்பையன்....!

Thursday, 1 July 2010

எப்போது?

முதலில் கண்ட போதா
முழுநிலவாய் நீ முகமலர்ந்த போதா
முத்துப்பற்களால் நீ சிரித்த போதா
முகம் பார்க்க நீ தலை குனிந்த போதா
முகவரி தொலைந்த பிள்ளை முகம் போல
நீ முழித்துக்கொண்டிருந்த போதா
மூழ்கிப்போனேன் நான் உனக்குள்.......

---------------------------------------------------------------------------

உன் முகம் பார்த்து விழிக்கும் காலைகள்
உன்னோடு ருசிக்கும் தேநீர் மாலைகள்
உன் கைகோர்த்து நடக்கும் சாலைகள்
உன் தோல் சாய்ந்து கிடக்கும் கடற்கரைகள்
எல்லாம் எப்போது தருவாய் என்று காத்திருக்கிறேன்.....


Wednesday, 26 May 2010

ஓவியத்துக்குள் ஓவியம்

நீ தொடு தூரமென்றாலும் உன்னைத்தொட, தொடாமல்
ஏங்கி தவிக்கும் என் விரல்கள்
நீ தொலைவான போது உன்னைத்தொடாமல், தொட
வெட்கி நிற்கும் என் அதே விரல்கள்...

நீ சிரிக்கும் போது உன் எதிரில் சுவர் ஏதும் இல்லாமல் பார்த்துக்கொள் ஏனென்றால்
நீ சிந்தும் சிரிப்புகள் எதிரொலியாய் சிதறும் போது கதறுகிறது என் மனது
எதை சேகரிப்பது என்று தெரியாமல்.. உன் சிரிப்பையா இல்லை சிவரின் சிரிப்பையா...

இன்னொரு தடவை பூந்தோட்டத்தில் என்னை சந்திக்க வராதே.
நீ சென்ற பின்பும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.
நீ அருகிருந்த பூச்செடியிடம் நீயென நினைத்து...

உன்னிடம் நான் ஏதோ ஒன்று குறும்பாய் சொல்ல நீயோ "போடா பொறுக்கி" என்கிறாய்.
நான் ரகசியமாய் நீ சிந்தும் புன்னகை பூக்களை பொறுக்கும் பொறுக்கி என்ற உண்மை உனக்கு எப்படி தெரிந்தது?

ஓவிய கண்காட்சிக்கு சென்ற போது நீ அங்கிருக்கும் ஓவியங்களை பிரமித்து பார்த்துக்கொண்டிருந்தாய். நானோ உன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென என் பக்கம் திரும்பிய நீ சிரித்துக்கொண்டே என்ன என்பது போல் பார்த்தாய். ("ஓவியங்களை விட நீயே அழகாய் இருகிறாய்" என்ற பதிலை நீ எதிர்பார்த்திருப்பாய் போல) "ஓவியத்துக்குள் ஓவியம் இன்றுதான் நான் காண்கிறேன்" என்பதை அறியாத நீ.

புத்தகத்துக்குள் மயிலிறகு வளர்க்கும் சிறுவனிடம் மயிலிறகு ஒன்றை தருமாறு கெஞ்சிக்கொண்டிருந்தேன்.
விசித்திரமாய் பார்த்த நீ எதுக்கு இந்த வயதில் உனக்கு மயிலிறகு என்றாய்?
மயிலிறகால் மை தொட்டு மையலே உன் பெயரெழுததான்..
எங்கே, பேனாவினால் உன் பெயரெழுதினால் உனக்கு வலிக்குமோ என்றுதான் என்றேன்.