Wednesday, 21 July 2010

காதல் என்றால்...

ஓர் வரட்சியான காலகட்டம் நிலவுகின்றது அந்தக்காட்டில். எங்கும் வரட்சியால் உணவுக்கும் நீருக்கும் பெரும் தட்டுப்பாடு. பல மிருகங்கள் இறந்துகொண்டு வருகின்றது பட்டினியால். இரு மான்கள் சோடியாக காடுமுழுவதும் அலைந்து திரிகின்றன நீருக்காய். சிலநாட்கள் நீரின்றி அலைந்த களைப்புடன் கண்டுவிட்டன ஒரு வற்றிப்போன குட்டையை. அக்குட்டை முழுமையாக வற்றிப்போய் கொஞ்ச நீரே மிஞ்சியிருந்தது. எஞ்சியிருந்த கொஞ்ச வலிமையால் ஓடிச்சென்றன இருமான்களும் குட்டையருகே. நீரில் வாயை வைத்த பின்னர் தான் தெரிந்தது அந்த நீர் ஒரு மானுக்கு மட்டுமே போதும் என்று. பெண் மான் நினைத்தது தான் குடித்தால் எங்கே ஆண் மானுக்கு போதாமல் போய்விடுமோ என்றெண்ணி குடிப்பது போல் பாவனை செய்ய ஆண் மானும் தான் குடிக்காமல் தலையை எடுத்தால் பெண் மான் நீரை குடிக்காது என்றெண்ணி தானும் குடிப்பது போல் பாவனை செய்ய தொடங்கியது.
முடிவாய் ஆண் மான் குடிக்கட்டும் என்று பெண் மானும் பெண் மான் குடிக்கட்டும் என்று ஆண் மானும் நீரை குடிக்காமல் நடித்துக்கொண்டிருந்தன....

***********************************************************

எனது பட்டமளிப்பு விழாவின் திகதி அறிவிக்கப்பட்டது. இப்போது இருக்கும் பொருளாதார பிரட்சினைகளாலும் குடும்ப பொறுப்புகளாலும் அம்மாவையும் அப்பாவையும் விழாவிற்கு அழைப்பது கொஞ்சம் கஷ்டமான விடயமாக இருந்தது. என்றாலும் யாரவது ஒருவரை அழைக்கலாம் என்று எண்ணி அம்மாவை தொலை பேசியில் தொடர்பு கொண்டேன். விழாவிற்கு அம்மா வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். சிறிது நேர உரையாடலின் பின் தான் வரவில்லை அப்பாவை அழைக்குமாறும் சொன்னார்கள். ஏன் என்று கேட்டதற்கு தன்னை விட அப்பா வந்தால் தான் நன்றாக இருக்கும். அவர் தான் நான் நன்றாக படிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தவர் அதோடு அதற்காக மிகவும் பாடுபட்டவர் அவர் தான். அப்பா வந்தால் தன்னை விட அதிக சந்தோசப்படுவார் என்றார்கள் அம்மா. அப்போது அப்பா அருகில் இல்லை அவர் வெளியில் சென்றிருந்தராம். மறுநாள் அப்பாவிடம் தொலைபேசியில் பேசும் பொது அவரை விழாவிற்கு வருமாறு அழைத்தேன். உடனே அவர் அதை மறுத்து தான் வரவில்லை என்றார். நான் நேற்று அம்மா கூறியதை அப்பாவிடம் சொன்னேன். அப்பா உடனே சொன்னார் "உலகத்துல எவ்வளவு பெரிய சந்தோஷமான நிகழ்வா இருந்தாலும் சரி கவலையான நிகழ்வா இருந்தாலும் சரி உன் அம்மா பக்கத்துல இல்லாம அதை என்னால அனுபவிக்க முடியாது". அவர் முடியாது என்று முடிக்கும் முன்னர் என் கண்களில் முட்டி மோதியது நீர்...

No comments:

Post a Comment