Wednesday, 10 February 2010

கடற்கரை தருணங்கள்


கடற்கரை கோலங்களாக காதலர்களின் கால் தடங்கள் ஆங்காங்கே பரவிக்கிடக்கும் மாலை நேரம். சேர்ந்து பயணிக்கும் காதல் ஜோடிகளின் கால் தடங்களை கண்டு பொறாமைப்படும் கடலலைகள் அவற்றை எல்லாம் அழித்துவிட கங்கணம் கட்டிக்கொண்டு மணல் தரையில் போராடிக்கொண்டிருந்தது.....

பலபேர் அந்த கடற்கரையில் கூடியிருந்தாலும் ஆயிரம் பேர் என்னை கடந்து சென்றாலும் நான் உன் நினைவுகளோடு தனிமையாகவே உனக்காக காத்திருந்தேன்...

மாலை வானம் தொலை கடல் மீது சாய்ந்து கொண்டு சிவப்பாய் சிவந்துகொண்டிருந்தது...
நேற்று நீ என்தோள் சாய்கையில் உன் வெட்கி சிவந்த முகமே என் முன் காட்சியாய் தோன்றிட எனக்குள்ளே சிலிர்த்துக்கொண்டேன்.

திடீரென இரு கைகள் பின்னால் இருந்து என் கண்களை மூடிக்கொள்ள.....

"உன்னைத்தவிர வேறு யாரும் என் கண்களை மூடப்போவதில்லை எதற்கு இந்த வேண்டா வேலை கவிதா"

என்றபடி கண்களை மூடிய கைகளை விலக்க முயற்சிக்காமலே அமர்ந்திருந்தேன். கைகளை நீயாகவே எடுத்துவிட்டு என் தலையில் ஒரு குட்டு...
மென் கோபம் உன் கண்களில் தெரிந்திட ஓர் அதட்டும் பாணியில் நீ கேட்டாய்....

"யாரவள் எனக்கு தெரியாமல்?"

சிறு ஏளனப்புன்னகையுடன் நான்...

"உன்னைத்தவிர வேறு யாரும் என் கண்களை மூடப்போவதில்லை எதற்கு இந்த வேண்டா கேள்வி"

என்றேன். புரிந்தவளாய், சிணுங்கினாய் நீ... ரசித்தேன்.

"மன்னித்துக்கொள் இன்று 'கொஞ்சம்' நேரமாகிவிட்டது. நீ வந்து கனநேரமோ..?"

"இல்லை இப்பதான் 'கொஞ்ச' நேரம்..... மூன்று மணிக்கு வந்தனான்"

"அடப்பாவி இது உனக்கு கொஞ்ச நேரமோ? ஐந்து மணிக்கு தானே வருவதாய் சொன்னாய்....."

"நீ அருகில் இருக்கும் போது உன்னை நினைப்பதை விட உனக்காக காத்திருக்கும் போதே உன்னை அதிகமா நினைக்கிறேன்..
உனக்காக நீண்ட நேரம் காத்திருக்கலாம் என்றுதான்...."


நீ என்தோள் சாய்கிறாய்...... வானம் சிவந்திருந்தது....

No comments:

Post a Comment